Monday, January 28, 2008

சேவல் துலிர்க்கவேண்டுமா பலிகொடுக்க?

என் தங்கை வீட்டிற்குள் நாகபாம்பு நுழைந்துவிட்டதாம் இவர்கள் பயபக்தியுடன் பாம்பு புற்றிடம் சென்று வேண்டிக்கொண்டால் பாம்பு வராது என்று நம்பி வேண்டிக்கொண்டார்களாம். நாளைக்கு வாங்க சாமி கும்பிடலாம் சேவல் அறுக்கவேண்டும் என்றார்கள். சும்மா சாமி கும்பிடுவது என்றால் நீங்களே கும்பிடுங்கள் என்று கூறியிருப்பேன், ஆனால் சேவல் அறுப்பதால் சரி வருகிறேன் எதற்கு சாமி கும்பிடுகிறீர்கள் என்றேன், விவரத்தை கேட்டுவிட்டு சரி நான் வந்தா சாமி ஏற்றுக்கொள்ளுமா என்றேன்? எல்லாம் ஏற்றுக்கொள்ளும் நீங்க வாங்க என்றார்கள். சரி என அடுத்த நாள் நானும் போக ஒருவழியாக வீடுகளை சுத்தம் செய்துவிட்டு அனைவரும் தலைக்கு குளித்துவிட்டு புறப்பட்டார்கள் பக்கத்து காட்டில் உள்ள பாம்புபுற்றை நோக்கி. போதுவாக விடுமுறை நாட்களில் விருப்பம்போல குளித்தால் உண்டு ஆனால் சோம்பலை வலுக்கட்டாயமாக விரட்டிவிட்டு உடலுக்கு மட்டும் குளித்துவிட்டு போயிருந்தேன். தங்கையும் மச்சானும் முன்னே நடக்க நான் பின் தொடர்ந்தேன், பொங்கலிட்டு முடித்தவுடன் புற்றின் மேல் மஞ்சள் மற்றும் குங்கும பொடிகளை புற்றின் மீது தூவினார்கள், அந்த புற்றின் கோலத்தை பார்த்தவுடன் எனக்கே பக்தி வழிந்துவிடுமோ என்றாகிவிட்டது, ஏனென்றால் அப்படியொரு களைகட்டிவிடப்பட்டிருந்தது, மாலை வேறு போட்டுவிட்டார்கள். அடுத்தது நமது வேலை வந்துவிட்டது சேவலை அறுப்பது. சேவல் மீது மண் அல்லது தண்ணீரை போடுவார்கள் அது சிலிர்த்து துலிர்க்கவேண்டுமாம், அப்போது தான் கடவுள் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். கடவுள் ஏற்றுக்கொண்டதாக நம்ப இப்படியொரு மொழியை கடவுள் எனக்கு இதுவரை சொல்லவில்லையே என்று சொல்லிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன், புற்று மண்ணை எடுத்து சேவலின் கொண்டை மேல் போட்டார்கள் சேவல் உயிர் போகபோகும் கவலையில் தலையை அசைக்காமல் கண் இமைக்காமல் இருந்தது. சேவலின் காலை கழுவ மறந்துவிட்டோம் என காலை கழுவினார்கள் பின்னர் மீண்டும் திருநீறு எனும் சாம்பலை அள்ளிப்போட்டார்கள் அப்போதும் சேவல் அசையவில்லை, இப்படியே ஒரு ஐந்து நிமிடம் கழிந்தது, எனக்கு கவலையாகிவிட்டது, நாம் இப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பதால் தான் சேவலை கடவுள் ஏற்கவில்லை என ஒரு கருத்தாகிவிடுமோ என்று. தங்கையும் மச்சானும் சற்று கவலைபட ஆரம்பித்தார்கள் நிலைமையை சரி செய்ய ஒரு ஏற்பாடு செய்தேன், இருங்க இப்ப நான் வந்தா தான் சாமி ஏற்றுக்கொள்ளும் என்று கூறிவிட்டு சும்மா ஒரு நிமிஷத்துக்குள்ள துலிர்க்கும் பாருங்க என கூறிவிட்டு மழை பெய்வது போல சேவலின் கொண்டை மேல் சற்று மேலிருந்து தண்ணீரை சிந்தவிட்டேன், சேவல் தண்ணீரின் உறுத்தலால் உடல் சிலிர்த்து சிறகையும், கொண்டையையும் துலிர்த்து உடல் படபடத்தது, உடனே ஆகா துலிர்த்துவிட்டது என சேவலின் கழுத்தை அறுத்து புற்றின் மேல் இரத்தத்தை சிந்தவிட்டார்கள், அடபாவிகளா நீங்கள் ஆபத்தில் இருந்து தப்பிக்க ஒரு சேவல் பலியா அப்படியானால் இனி பாம்பு வரவே வராதா என கேட்டுக்கொண்டே சரி சீக்கிரம் கொழம்ப தயார் பன்னுங்கப்பா என ஒரு பிடி பிடித்தேன். இப்படி புற்றுக்கு சேவல் அறுப்பவர்கள் உள்ளவரை நமக்கு கறி சோற்றுக்கு பஞ்சமில்லை

No comments: