Thursday, May 8, 2008

கடவுளை மறுக்கத் துணியவேண்டும்

குடிஅரசு 21.5.1949 என்னை நாஸ்திகன் என்று சொல்லுகின்றவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது? அதிலும் சமதர்மக் கொள்கையை பரப்பவேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ரஷ்யாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையை பரப்ப முயற்சித்ததால்தான். நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல; சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும், ஏன், எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாப்பிரியர்கள் சொல்லித் திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றன. கிறிஸ்துவையும், முகமது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மும், சீர்திருத்தமும்தான் காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே, நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கிறோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால், அவற்றைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.
நாம் விரும்பும் தன்மை
Periyar Articles
குடிஅரசு 15. 1. 1949 நம் கழகமும், நமது முயற்சியும், பிரச்சாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு உலக மக்களையும் நோக்கும்போது நமது நிலை எப்படி இருக்கிறது? மிக மிகத் தாழ்ந்த நிலையாக இல்லையா? நாமும் நம் நாடும் உலகில் மிகவும் பழைமையானவர்களாவோம். மற்ற நாட்டவரைவிட நம் பெருமையும், வாழ்வும் மிக மிக உயர்ந்த தன்மையில் இருந்ததாகும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த நாம், நமது நாடு, இன்று பழிப்புக்கு இடமான தன்மையில் இருக்கிறோம். அதாவது, நாம் சமுதாயத்தில் கீழான மக்களாக்கப்பட்டு, வாழ்வில் அடிமைகளாக இருக்கும்படி செய்யப்பட்டு விட்டோம். இன்றைய உலகம் மிகவும் முற்போக்கடைந்திருக்கிறது. மக்கள் அறிவு மிகவும் மேலோங்கி இருக்கிறது. மக்கள் வாழ்வும் எவ்வளவோ மேன்மை அடைந்திருக்கின்றது. ஆனால், நாம் மாத்திரம் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகிறோம். இதற்குக் காரணம் எதுவானாலும் நாம் சமுதாயத்தில் கீழ்ஜாதி மக்களாக இருந்து வருவதல்லாமல், நம்முடைய பழக்கம் வழக்கம் முதலிய காரியங்களும் அதற்கேற்றவண்ணம் உலகோர் பழிக்கும்படி இருக்கிறது. நம் பெண் மக்கள், தாய்மார்கள் இதை உணரவேண்டும். நாம் சூத்திரர்களாகவும், நம் பெண்கள் சூத்திரச்சிகளாகவும் இருக்கிறோம். நம்மில் 100-இல் 10 பேருக்குக்கூட கல்வி இல்லை. நாம் 100-க்கு 90 பேர் உடலுழைப்புப் பாட்டாளி மக்களாகக் கீழ்வாழ்வு வாழுகிறோம். இந்த நிலைக்குக் காரணம் என்ன? நம் இழிவையும், கஷ்டத்தையும்பற்றி நமக்கு ஏன் கவலை இல்லை? பாட்டாளி மக்களாகிய நாம் ஏன் தாழ்ந்த ஜாதிகளாகக் கருதப்படவேண்டும். அதுவும் இந்த விஞ்ஞானக் காலத்தில் என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். நம்மிடத்தில் எந்தவிதமான இயற்கை இழிவோ, இயற்கைக் குறைபாடோ கிடையாது. நாம் சமுதாயத் துறையில் கவலைப்படுவதில்லை. நம் சமுதாய வாழ்வுக்கு ஆன காரியங்களைப்பற்றிச் சிந்திப்பதில்லை. நாம் தனித்தனியாக, தத்தம் நலம் பேணி, வெறும் சுயநலக்காரர்களாகி, பொதுவில் தலைதூக்க இடமில்லாமல் போய்விட்டது. நமது சமுதாய வாழ்வுக்கென்று, நமக்கு பொருத்தமில்லாவற்றை மதம், கடவுள், தர்மம் என்று சொல்லிக்கொண்டு அவற்றுக்கு அடிமையாகி வாழ்வதுதான் நம்மைத் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டது. நமக்கு நல்வழி காட்டவும், அறிவைப் பெருக்கவும், மனிதத் தன்மையடையவும் நல்ல சாதனம் கிடையாது. நம் மதம், கடவுள், தர்மம் என்பவை நமக்குக் கேடானதாக இருந்து வருவதை நாம் உணரவில்லை. நம் மதம் நம்மை என்றைக்குமே முன்னேற்றாததாக இருந்துவருகிறது. மதத்தின் பயனாகத்தான் நாம் சூத்திரர், சூத்திரச்சி, கடை ஜாதியாக இருக்கிறோம். நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மைச் சுரண்டுபவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது. நமது தர்மங்கள் என்பவை நம்மை முயற்சி இல்லாதவர்களாக ஆக்கிவிட்டன. ஆகையால், நாம் இத்துறையில் எல்லாம் பெருத்த மாறுதல்களை அடையவேண்டும். நம் கடவுள் தன்மையில் இருந்துவரும் கேடு என்னவென்றால், கடவுளை ஓர் உருவமாகக் கற்பித்துக்கொண்டு, அதற்காக வீடு வாசல் (கோயில்), பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்துகொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம். அது மாத்திரமல்லாமல், நாம் கற்பனை செய்து, நாம் உண்டாக்கி, நாமே மேல்கண்டபடி வசதியும் செய்து கொடுத்துவிட்டு, அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக்கொண்டு, நம்மையும் நாமே இழிஜாதியாய்க் கருதிக்கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்டி நிற்கிறோம். இதனால் நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்றதனமும் உலகில் வேறெங்காவது காண முடியுமா? இன்றைய நம் கோயில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவற்றுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவற்றுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை மூலம் பயனடைந்து,உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவற்றுக்குகெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக் கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும் நட்டமும் அடைகின்றவர்கள் யார்? நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்! இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோயில்களில் ஒரு கோயிலையாவது, மேல்ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா? அவற்றுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறுமான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா? நாம் கோயில் கட்டி, நாம் பணம் கொடுத்து, பூசை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழிஜாதி, நாலாஞ் ஜாதி சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்? நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத்தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல்ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்கு புத்தி கூறி இருக்கிறார்களா? நாம் ஈன ஜாதி, இழிமக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள்தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம், சொத்து, போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா, இல்லையா? அதுபோலவேதான், நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானை பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா, இல்லையா? அதுபோலவேதான், நம் தர்மங்கள் என்று சொல்லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசிமகன், தாசிமகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா? ஆகவே, நமது இழிவுக்கும், ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல்லாமல் வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா? நமது மேன்மைக்கு, நல்வாழ்வுக்கு, நமது இழிவு நீங்கி மனிதத்தன்மை வாழ்வு வாழ்வதற்கு, மனித சமுதாயமே பகுத்தறிவுடன் உயர்ந்த ஜீவப்பிராணி என்பதைக் காட்டிக் கொள்வதற்கு, நமது இன்றைய நிலையில் இருக்கும் கடவுள், மதம், தர்மம், நீதி முதலியவை பெரிய மாற்றமடைந்தாகவேண்டும். நமது கடவுள்கள், காட்டுமிராண்டி காலத்தில் கற்பிக்கப்பட்டவை அல்லது கண்டுபிடிக்கப்பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை, நமது மதமும், மனிதனுக்கு நாகரிகமும், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்டதாகும். நமது ஒழுக்கம், நீதி என்பவையும் அக்காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவையாகும். இன்று காலம் மாறிவிட்டது. இயற்கைகூட மாறிவிட்டது. அறிவின் தன்மை, அனுபவத்தன்மை மாறிவிட்டது. மனிதனுடைய மனோதர்மம், ஆபாசம், ஆற்றல் மாறிவிட்டது. இப்படிப்பட்ட இக்காலத்துக்கு, 20 ஆம் நூற்றாண்டுக்கு 4000, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடவுள், மதம், தர்மம், நீதி செல்லுபடியாக முடியுமா? ஆகவே, இன்றைக்கு ஏற்றபடியாக இவை மாற்றப்பட்டாகவேண்டும். இன்று எந்த ஒரு ஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறோமோ, அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள், மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை, முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண்டும். இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா? நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா? நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது, குடுக்கைத் தலையனிடமாவது உண்டா? நான் மதத்தின்மீது, கடவுள்மீது குற்றம் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்ட காலத்தில், அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களால் அவை சிருஷ்டிக்கப்பட்டவையாகும்; காட்டிக் கொடுக்கப்பட்டவையாகும். இந்த மதத்தை - கடவுள் தன்மைகளை ஏற்படுத்தின - உண்டாக்கிய - காட்டின பெரியோர்கள் தெய்வப் பிறவிகள் - தெய்வீகத்தன்மை உடையவர்கள் என்கிறதான அந்த மகான்களே இன்று இருப்பார்களேயானால், உடனே மாற்றிவிட்டு வேறு வேலை பார்ப்பார்கள், அல்லது வெளியே வர வெட்கப்படுவார்கள். உதாரணமாக, இவற்றை நீங்கள் சரி என்கிறீர்களா? அதாவது, மூன்று பெரிய கடவுள்கள்; ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள்; மாடு, பருந்து முதலிய வாகனங்கள்; பெண்டாட்டி பிள்ளை குட்டிகள்; போதாதற்கு வைப்பாட்டிகள்; மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு உருமாறி விபச்சாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள். இம்மூவரையும் தலைவராகக் கொண்ட மதத்தில் நாலைந்து ஜாதிகள், முதல் ஜாதி பார்ப்பன ஜாதி, இந்த ஜாதி பாடுபடாமல் மற்றவர்கள் உழைப்பை சுரண்டியே வாழ்ந்து வரவேண்டும். இவர்களுக்குத்தான் எங்கும் முதலிடம்! மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குக் குற்றேவல் செய்து, வாயையும், வயிற்றையும் கட்டி அடங்கி ஒடுங்கி வாழவேண்டும்! இந்த மதத்தில் உள்ள மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் நீதி - ஒழுக்கம் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு மாதிரி. பார்ப்பான் திருடினால் அவன் தலையைச் சிரைத்து மொட்டை அடிப்பதே போதுமான தண்டனை. அதே திருட்டை ஒரு அய்ந்தாவது ஜாதிக்காரன் செய்தால், அவனுடைய கையை வெட்டி விடுவது அதற்கேற்ற தண்டனை என்று சொல்லுகிற மனுநீதி. அந்த மனுநீதியில் சொல்லப்பட்டிருக்கும் நீதிகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, அக்காலத்திய கடவுள், மத தர்மங்களை, இக்காலத்துக்கு ஏற்றபடி அமைத்துக் கொள்ளுங்கள் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். பெரிய அறிவாளிகள்கூட எண்ணெய் விளக்கை இன்று அறவே நீக்கிவிட்டு எலெக்ட்ரிக் விளக்கு போட்டுக் கொள்ளவில்லையா? கட்டைவண்டிப் பிரயாணத்தை நீங்கள் தள்ளி விட்டு ஏராப்ளேன், ஆகாயக்கப்பல் பிரயாணத்தை நீங்கள் விரும்பவில்லையா? ஆகையால், ஆதிகாலம் என்கின்ற காலத்தில், ஆதிகால மனிதர்கள், மகான்கள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிகாலத் தன்மையிலிருந்து மாறுபட்டு, இக்கால நிலைக்கு ஏற்றது போல் நடந்துகொள்ளுங்கள். "காலத்தோட கலந்து செல்லாதவன் ஞாலத்துள் பயன்படமாட்டான்."
அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்
Periyar Articles
குடிஅரசு 6.12.1947 உலகத்தை எல்லாம் உண்டாக்கி, அதிலுள்ள எல்லாவற்றையும் நடத்தும் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரால்தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு)கின்றது என்று சொல்லப்படுமானால், அவரை நடுநிலைமையுடையவனென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரத்தியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன. அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகிறது என்று சொல்லுவதைவிட அவரால் அதிகத் தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது. அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜூ இருக்கின்றது. (அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன. அவர் ஜீவன்களுக்கு நன்மையே செய்கிறாரென்பதைவிட தீமையே செய்கின்றார் என்பதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மை அடைந்தவர்களைவிட தீமையடைந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன. அவர் நாகரிகமுடையவர் என்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன. அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட, அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கையை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன. அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள், சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்துகொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப்பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார். உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லையென்று கருதித் தினம் சவரம் செய்துகொள்ளுவதைப் பார்க்கின்றோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக்கொண்டே வருவதையும் பார்க்கின்றோம். இது என்ன, கடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுகின்றாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?
ஒரு யுக்தி ஆராய்ச்சி
Periyar Articles
குடிஅரசு 1. 7. 1944 மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதன் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவையும், தேவார திருவாசகங்கள், பிரதாபந்தங்கள் ஆகியவையும் ஆகும் என்பது எமது கருத்து. இந்தக் கருத்துக்கு சான்றுகள் அவற்றிலேயே இருக்கின்றன. விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரியர்களின் எதிரிகளை அதாவது, மனுதர்மத்திற்கு விரோதமாயும், ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும், தடுக்கவும் முயற்சித்தவர்களைக் கொல்லவும், அழிக்கவும், சதி செய்யவும் ஏற்பட்டவை. அதுபோலவே சிவன் அவதாரமான சுப்ரமணியனும், மற்றவர்களும் அதுபோலவே ஆரியரின் எதிரிகளை அழிக்க ஏற்பட்டவை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், சுரர், அசுரர், அரக்கர், இராட்சதர் என்கின்றவர்களைக் கொல்ல - அழிக்க வந்தவர்கள் என்றே சொல்லலாம். ஆரியர்களின் தனிக் கடவுள் உற்பத்திகளில் சிவன் முதற் கடவுள். அதாவது, முதலில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுளாகவும், ஸ்கந்தம் முதலில் உற்பத்தி செய்யப்பட்ட புராணம் ஆகவும் இருக்கவேண்டும். இவை விஷ்ணுவுக்கும், இராமாயணத்திற்கும் முந்தியதாகவும் இருக்கவேண்டும். இராமாயணம் சமீப காலத்தில் கந்த புராணத்தைப் பார்த்து சற்று திருந்திய காலத்திருத்தத்தோடு எழுதியதாகவே இருக்கவேண்டும். எப்படி ஆயுதங்களில் கல், கவண், ஈட்டி (வேல்) வில், துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, விஷப்புகை ஆகியவை ஒன்றிற்குப் பின் ஒன்று வரிசைக் கிரமமோ அதுபோல்தான். முதலில் சிவன், கந்தபுராணம், பிறகு விஷ்ணு சம்பந்தமான புராணங்கள், பரதம், இராமாயணம் ஆகியவை என்று சொல்ல வேண்டும். சுரர், அசுரர் என்பவை எல்லாம் ஆரியர், ஆரியர் அல்லாதவர் என்பதற்கு முதலில் ஏற்படுத்திக் கொண்ட (இட்ட) பெயர்களாகவும், தேவர்கள் இராட்சதர்கள் என்பவை பின்னால் ஏற்படுத்திக் கொண்ட பெயர்களாகவும் தெரிகின்றன. சிவன் முதற் கடவுள் என்பதற்கும், கந்த புராணம் முதல் புராணம் என்பதற்கும் உதாரணம் என்னவென்றால், சிவன் கற்பிதம் மிக்க பழைமையான காட்டுமிராண்டி காலத்தியதாக இருக்கிறது. அதாவது தலை சடையாகவும், ஆடை மிருகத்தின் தோல் ஆகவும், அணி (நகை) பாம்புகள் - எலும்புகளாகவும், புஷ்பம் கொன்றை எருக்கம் பூக்களாகவும், பாத்திரம் மண்டை ஓடு, ஆகாரம் தேன், தினைமாவு, கொழுக்கட்டையாகவும், ஆயுதம் 1-வது மழு, 2-வது சூலம், இடம் மலை, விளையாடுவது சுடலை, பூசிக் கொள்ளுவது சாம்பல், ரூபம் (சாயல்) அகோரம், வாகனம் மாடு, குணம் வெளிப்படையான ஹிம்சை, நடனம் காட்டுமிராண்டி ஆட்டம், சங்கீதக் கருவி உடுக்கை; பெண் ஜாதி இதுபோன்றே கோரரூபமுள்ள காளி, அவள் வாகனம் சிங்கம், பிள்ளைகள் ஒன்றுக்கு ஆறுமுகம், மற்றொன்றுக்கு யானைத் தலை விகார ரூபம். இந்த மாதிரியாக காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்றபடியாகவும், காட்டுமிராண்டிக் காலத்திய எண்ணங்களின் படியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறபடியால், சிவன்தான் முதலாவதாக சித்தரிக்கப்பட்ட கடவுளாக இருக்கவேண்டும் என்பதும் விளங்கும். அதுபோலவே, கந்தபுராணம் என்பதும் வைணவ புராணங்களைவிட முந்தியதாகவே இருக்கவேண்டும். ஏனெனில், கந்தனின் உற்பத்தியை ஆபாசமான முறையில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆயிர தேவ வருஷம் (அதாவது பல யுக காலம்) சிவன் புணர்ந்ததால் ஏற்பட்டான் என்றும், அந்த மிஞ்சின இந்திரியம்தான் என்றும், நெற்றிப் பொறியில் தோன்றினான் என்றும், மற்றும் பலவித ஆபாசமானதும் அசம்பாவிதமானதும், சிறிதும் அறிவுக்குப் பொருத்தமற்றதுமான வழியில் உற்பத்தியானதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. கந்த புராணத்தில் வரும் பாத்திரங்கள் அக்கினிமுகன், சிங்கமுகன், ஆட்டுமுகன் முதலியன இயற்கைக்கு மாறுபட்டவை. யுத்தமுறை இந்திரன் குயிலாக மாறினான், சுரன் சக்ரவாகப் புள் குருவியாக மாறினான், இந்திரன் மயிலாக வந்தான். சுரன், தீ, காற்று முதலிய உருவுடன் தோன்றினான், வேலால் குத்துதல், சேவலாக ஆகிவிடுதல் முதலியவை எல்லாம் காட்டுமிராண்டிக் காலத்திய கற்பனையேயாகும். இந்திரனுடைய நிலைமையும், இராமாயணத்தில் காட்டப்பட்டிருக்கும் இந்திரனைவிட காட்டுமிராண்டித்தன்மை கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றது.
ஆரியர் கடவுள்கள்
Periyar Articles
குடிஅரசு 18. 3. 1944 மாரியின் தன்மை ஆரியர் கடவுள்களுக்கு விபச்சாரித்தனத்தைக் கற்பிக்காவிட்டால் அவற்றுக்குப் பெருமை இல்லை என்று ஆரியர்கள் கருதி வந்திருக்கிறார்கள் போலும். ஆண் கடவுள்களுக்கு விபச்சாரித்தனம் கற்பித்துக் கொண்டிருப்பதில் நாம் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், தேவ தாசிகளுக்கு விபச்சாரித்தனம் எப்படி குற்றமற்றதும் குறை கூறப்படாததுமாய் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களுக்கும் விபச்சாரித்தனம் குற்றமற்றதும் குறைகூறக் கூடாததுமாய் இருக்கின்றது. அது போலவே, ஆண் கடவுள்களின் விபச்சாரித்தனம் எப்படி போற்றி மகிழக் கூடியதாகவும், அதன் பேரால் உற்சவம், திருநாள் கொண்டாடும்படியான பெருமை அளிக்கத்தக்கதாகவும் இருக்கிறதோ, அதுபோல் ஆண்களின் விபச்சாரித்தனமும் ஆண்களுக்கு ஒரு பெருமையாகவே இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், பல ஆண்கள் தங்கள் நடத்தையால் தங்களது மனைவிமார் தப்பாக நடக்க நேருமே, சில இடங்களில் தப்பாக நடந்து அடையாளங்கள் கூடத் தெரிந்து உலகம் இகழுகின்றதே என்று தெரிந்தும் அதைப்பற்றிக் கவலை இல்லாமல், பெயர் பெற்ற சில விபச்சாரிகளை தாங்கள் வைத்துக் கொண்டிருப்பதாகப் பிறர் கருதும்படி நடந்துகொள்ளுவார்களா? சில கிராமாந்தரங்களிலே "பண்ணையாருக்கு பிறந்தது பள்ளுப்பாடிப் பிழைக்குது; பண்டாரத்துக்குப் பிறந்தது (அதாவது தவசிப்பிள்ளை அல்லது சமையல்காரருக்குப் பிறந்தது) பட்டா மணியம் செய்யிது" என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது, எஜமானனின் சொந்த மனைவி, சமையல்காரன் சம்பந்தத்தால் பெற்ற பிள்ளை எஜமானனது சொத்துக்கு உரிமையாகிவிட்டது என்றும், எஜமானனின் தாசியினிடம் எஜமானனுக்கே பிறந்த பிள்ளை கீழான தொழில் செய்து இழிவான நிலையில் இருக்கிறது என்றும் அருத்தமாகும். இதிலிருந்து, ஆண்கள் விபச்சாரித்தனத்தால் இழிவடைவதில்லை என்பது தெரிகிறது. இது எப்படியோ போகட்டும். எடுத்துக் கொண்ட விஷயத்திற்குப் போவோம். ஆனால், ஆரியர்கள், பெண் தெய்வங்களுக்கும் விபச்சாரித்தனக் குற்றத்தைச் சுமத்துவதற்குப் பின்வாங்குவதில்லை. இது மிகவும் இழித்துக் கூறத்தக்கதாகும். துரவுபதை, சீதை, அகலிகை, தாரை முதலியவர்கள்மீது சுமத்தப்பட்ட விபச்சாரக் குற்றங்களை ஆரியர்கள் குற்றமாகப் பாவிக்கவில்லை என்பதோடு, இப்பெண்களைப் பதிவிரதைகளுடனும் சேர்த்துவிட்டார்கள் என்றாலும், பாமர மக்கள் கடவுள்களான மாரியம்மன் முதலிய கடவுள்களுக்கும், விபச்சாரித்தனத்தைப் புகுத்தியது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். நம் கிராம தேவதையான மாரியம்மன், ஜமதக்கினி என்னும் ஒரு முனிவனுடைய மனைவியாய் ரேணுகை என்னும் பெயருடன் இருந்தவள். இவள், சித்திரசேனன் என்பவரின் நிழலைக்கண்டு மோகித்து மனம் கெட்டு கற்புக்குலைந்தாள். இது தெரிந்த கணவன் தன் மகனை அழைத்து இவளைக் கொலை புரியும்படி செய்தான். பிறகு, மகன் துக்கப்பட்டதன் பேரில் அவளை எழுப்ப மந்திர நீர் தெளித்தான். மகன், தலையை அடையாளம் கண்டுபிடித்தானே ஒழிய, உடலை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. ஆதலால் அவள் தலையை வேறு ஏதோ ஒரு உடலில் ஒட்டவைத்து அவளை உயிர்ப்பித்தான். அவள் எழுந்து கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். கணவன் மன்னித்து, நீ ஊருக்கு வெளியே கிராமங்களுக்குப் போய் வாழ்ந்து கொண்டு இரு என்று சொன்னான். அந்தப்படியே மாரி கிராமங்களுக்குப் போய் கிராம தேவதையாக ஆகிவிட்டாள். ஆனால், கிராமத்திலுள்ளவர்கள், இவளுடைய தலை மாத்திரம் இவளுக்குச் சொந்தமாகவும், உடல் வேறு ஒருவருடையதாகவும் இருந்தால், இவளுடைய உடலை தள்ளிவிட்டு தலையை மாத்திரம் வைத்து வணங்குகிறார்கள். (அதனால்தான் சென்னை முதலிய இடங்களிலும் மாரி கோயில்களில் இன்றும் தலை உருவம் மாத்திரமே வைத்து வணங்கப்படுகிறது. கிராம மக்களும் பலர் தலை உருவம் மாத்திரம் வாங்கி வைக்கிறார்கள்.) இந்த அம்மையை வணங்குவோர் வேப்பிலையும், மாவும், இளநீரும் பயன்படுத்துவதன் காரணம் என்னவென்றால், இந்த அம்மை கொல்லப்பட்டபின் சுடுகாட்டில் வேகும்போது உயிர் பெற்று எழுந்ததும், நேராக வீட்டுக்கு வர முடியாமல் நிர்வாணத்துடன் வேப்பிலைகளால் தன் மானத்தை மறைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பறச்சேரிக்குள் போய்ப் புகுந்தாள். அங்குள்ள பற ஜனங்கள், இந்த அம்மை பார்ப்பனப் பெண் ஆதலால் சாப்பாடு போட்டால், தங்களுக்குப் பாவம் வரும் என்று அஞ்சி, அரிசி மாவையும், பழத்தையும், இளநீரையும் தந்து உதவினார்கள். அதனால், அவையே அந்த அம்மைக்கு அதாவது வேப்பந்தழையும், மாவும், உடையும் ஆகாரமுமாக ஆகிவிட்டன. அந்த அம்மைக்கு தண்ணீர் ஏன் குடம் குடமாய் ஊற்றுகிறார்கள் என்றால், அந்தம்மையை சுடுகாட்டில் வைத்துக் கொளுத்தும்போது தண்ணீர் தெளித்து எழுப்பியதால் உடலில் கொப்புளங்களோடு போய் சேரியில் புகுந்ததால், உடல் குளிருவதற்கு ஆக தண்ணீர் ஊற்றப்பட்டதாம். இந்தப்படியாக மாரியம்மன் கதை இருந்துவருகிறது. மற்ற விஷயம் எப்படியோ போனாலும், இந்தம்மை கற்பழிந்தாள்; அதனால் சாபம் பெற்று மாரியம்மை ஆனாள் என்றால், கற்பு கெடாத பெண் தெய்வமே நமக்கு இல்லை என்றல்லவா ஆகிறது. இதிலிருந்து, ஆரியர்களுடைய கற்புக்கு அர்த்தம் என்ன என்பது விளங்குகிறது. பிசாசைப்பற்றி ஆரியர்களும், இஸ்லாமியர்களில் பலரும் நம்புகிறார்கள். இது மிகவும் மதியீனமான காரியம். கடவுளை எந்த ரூபத்தில் எந்தக் குணத்தில் மனிதன் நம்பினாலும், அது எவ்வளவு முட்டாள்தனமானாலும், "மனிதன் ஒழுக்கமாக நடப்பதற்கு அந்த நம்பிக்கை ஒரு சாதனம்" என்றாவது சொல்லுகிறார்கள். ஆனால், பிசாசை நம்புவது எதற்கு அனுகூலம் என்று கேட்கிறேன். பிசாசை நம்புவதிலும், அதிலுள்ள ஆபாசம் என்னவென்றால், ஒருவன் தன் பெண்ஜாதிக்குப் பிசாசு பிடித்து இருக்கிறது என்று நம்புகிறான் என்றால், அதன் அர்த்தமென்ன? ஒரு பிசாசு தன் மனைவியை கலவி செய்துகொண்டு வருகிறது என்றுதானே கருதி அப்படிச் சொல்கிறான். ஒரு பெண்ணை "ஒரு பிசாசு முதல் 15, 20 பிசாசுகள்" பிடித்து இருக்கின்றன என்றுகூட புருஷன்மார்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதுவும் பல ஜாதிப் பிசாசுகள்; அதிலும், "கீழ்ஜாதி"ப் பிசாசுகள் என்றுகூடச் சொல்லுகிறார்கள். இது மானமுள்ள பேச்சாகுமா? ஒருவன் மனைவியை 10 பிசாசுகள், 20 பிசாசுகள் கலவி செய்வதும், பிறகு இன்னும் கணவன் அவனை மனைவியாகக் கொள்ளுவதும் பார்த்தால் இந்தக் கணவனுக்கு சுயமரியாதை இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? இது என்ன மடத்தனம் என்பது எனக்கு விளங்கவில்லை. தன் மனைவியை வேறு மனிதன் எவனாவது திரும்பிப் பார்த்துவிட்டால் ஆகாயத்திற்கும், பூமிக்கும் குதிக்கும் என்பாய், 10,20 பேய்கள் சேர்ந்து கலவி செய்த பெண்ணை சேர்த்துக்கொண்டு தன்னை எப்படி "ஆண் பிள்ளை சிங்கம்" என்று சொல்லிக் கொள்ளமுடியும்? மனிதனைவிட பேய் பிசாசு உயர்வு என்று அர்த்தமா? அல்லது கையாலாகவில்லை; ஆனதால் எப்படியோ போய்த் தொலையட்டும் என்கிற வீரப்பிரதாபமா? என்று கேட்கிறேன். முஸ்லிம்களுக்கும்கூட சிலருக்கு இந்தப் பேய் உணர்ச்சி பிடித்திருப்பது பார்த்தால் அவர்கள் வேஷத்தில் முஸ்லிம்களே தவிர, உள்ளத்தில் இந்துக்களை (ஆரியர்களை) விட மோசமானவர்கள் என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. "கடவுள் நினைப்புக்கும், பேய் நினைப்புக்கும் ஒரு மயிர் இழை அளவுதான் வித்தியாசம்" என்று ஒரு பகுத்தறிவுவாதி சொல்லி இருக்கிறார். ஆனால், தங்கள் மனைவிமார்களிடம் பேய் கலவி செய்கிறது என்று கருதுகிற முஸ்லிம்கள், தங்கள் கடவுளைவிட பேய் எத்தனையோ கோடி மயிர் இழை அளவு பெரியது என்று கருதுகிறவர்களாவார்கள் என்று சொல்லுவேன். கடவுள் ஒருவன் மனைவியை இப்படிச் செய்வதில்லை. இந்துக்கள் கடவுள்களும் பேயைப்போல் 10, 15 கடவுள்கள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மற்றவன் மனைவியை கலவி செய்வதில்லை. ஆகையால், இரண்டு கூட்டத்தாருக்கும் இப்படிப்பட்ட புத்தி இருப்பது மிகவும் கேவலமானதேயாகும். நபி அவர்கள் குர்ஆனில் எங்காவது பேய் இருப்பதாகச் சொல்லி இருக்கிறாரா என்பது தெரியாது. இப்படிச் சொல்லியிருந்தால், அவர் பகுத்தறிவுவாதிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட முடியாதவர் என்று ஆகிவிடாதா?
கடவுள்களால் என்ன பயன்?
Periyar Articles
குடிஅரசு 19.12.1937விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுளைப் பற்றியும், பேசிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டித்தனமேயாகும். என்றாலும், நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்விதக் குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால், நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரச்சாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழைய கால அதாவது காட்டுமனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும், முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள், ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும், மனதுக்கும் எட்டாதது என்றும், அது, பெயரும் குணமும், உருவமும் இணையும் இல்லாதது என்றும், மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக் கூடியது என்றும், சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும், நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும், பல அறிஞர்களும் அதை ஒப்புக் கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால், இன்றைய தினம் இந்துக்கள் என்பவர்களுடைய, சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன. பாருங்கள், மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவையும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோயிலில் இரண்டு உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவற்றுக்கும் பூஜை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்ளவோடு இல்லாமல், இக்கடவுள்களுக்கு பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவையும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும், இக்கடவுளுக்கு கல்யாணம், சாவு முதலியனவும்கூட கற்பிக்கப்படுகின்றன. கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை; செய்கையில் செய்து காட்டி, அதாவது கடவுள் விபசாரித்தனம் செய்வதாகவும், தாசி வீட்டுக்குப் போவதாகவும், மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்து காட்டி, அவற்றுக்காக பல கோடிக் கணக்கான ரூபாய்களும், மனிதனின் விலை உயர்ந்த நேரமும், ஊக்கமும் உணர்ச்சியும் பாழக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆம் நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக் கொண்டு அவை மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்தாக புராணங்களையும், இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு, அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக் கடவுளாவது ஏற்றுக் கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும், சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் மூன்று தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே, அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண் ஜாதி வேண்டியிருந்தால், போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா, அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா, அல்லது ஓடிப்போய் விட்டதா, அல்லது முடிவெய்தி விட்டதா என்று நாமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக்கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச் செலவு ஏன்? சாமி கல்யாண சமாராத சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப் படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவற்றால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100-க்கு 95 பேர்கள் தற்குறி; நமது நாடும் உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி இரண்டு அணா வரும்படி கூட இல்லை என்று சொல்லுகிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா? ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவை எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால், யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும், ஆருத்திரா தரிசனத்துக்கும், தைப் பூசத்துக்கும், கார்த்திகை தீபத்துக்கும், திருப்பதிக் குடைக்கும், திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷா வருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்துச் செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக் கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால், இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா, தீமையா என்று கேட்கிறேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்குப் பயன்படுத்த முயற்சி செய்தால், வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களைக் கைப்பற்றி தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டமும், தற்குறித் தன்மையும், அன்னிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா என்று கேட்கிறேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டுத் தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து கொள்வதா என்று கேட்கிறேன். மற்றும், கடவுள் பேரைச் சொல்லிக் கொண்டு, பக்தியை காரணம் காட்டிக் கொண்டு எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்துகொள்ளுகிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மக்கள் துணி கட்டிக் கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும், மொட்டை அடித்துக் கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும், சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளுவதும், அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆன காரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா? மற்றும் மக்கள் சாப்பிடக் கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவற்றை கல்லின் தலையில் குடம் குடமாய்க் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், பத்து லட்சம், கோடி பெறும்படியான ஆறு மதில், ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள், கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவை எல்லாம் நாட்டு பொதுச் செல்வங்கள் அல்லவா? இவற்றை கல்லுகளுக்கு அழுதுவிட்டு, சோம்பேறி சூழ்ச்சிக்காரன் பார்ப்பான் வயிற்றை நிரப்பி, அவன் மக்களை அய்.சி.அய்., அய்கோர்ட் ஜட்ஜ், திவான்களாக ஆக்கிவிட்டு, இதுதான் கடவுள் தொண்டு என்றால், இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டுகளையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக்கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன். இனி எப்பொழுதுதான் நமக்குப் புத்தி வருவது? இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும், அவனது எரிச்சலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக் கொண்டு முட்டாள் ஜனங்கள், மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடுகிறார்கள். அப்படியானால், இந்தக் கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமாய்க் கூத்தாடுவதுதானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகமா? அப்படியானால், அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. இந்த பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். ஏதோ எங்களுக்குத் தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை, அதாவது, நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும், கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றன என்றும், இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும், ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். பொறுமையாய்க் கேட்டு, பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்றுதான் சொல்லுகிறோமே ஒழிய, பார்ப்பனர்கள்போல, நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ, நம்பினால் தான் மோட்சம், நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.
கடவுள்
Periyar Articles
குடிஅரசு 3.5.1936வினா: கடவுளைப்பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துகளை விளக்கிக் கூறு. விடை: கடவுள் வான மண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலோர் நம்புகிறார்கள். வினா: அப்புறம்? விடை: கடவுள் சர்வ ஞானம் உடையவனாம்; யாவற்றையும் பார்க்கிறானாம்; பிரபஞ்சம் முழுதும் அவனது உடைமையாம்; சர்வ வியாபியாம். வினா: கடவுள் ஒழுக்கத்தைப் பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்? விடை: அவன் நீதிமானாம்; புனிதனாம். வினா: வேறு என்ன? விடை: அவன் அன்புமயமானவனாம் வினா: கடவுள் அன்புமயமானவன் என்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா? விடை: இல்லை. மக்கள் அறிவும் ஒழுக்கமும் உயர உயர, கடவுள் யோக்கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது. வினா: உன் கருத்தை நன்கு விளக்கிக் கூறு. விடை: காட்டாளன் கடவுள் ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப் ஒரு கீழ்நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுள் போல் வெறியனாயும், பழக்குப் பழி வாங்கும் குணமுடையவனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக் கூடியவனாக இருக்கிறான். வினா: கடவுளைப் பற்றியே வேறு அபிப்பிராயங்கள் என்ன? விடை: மக்கள் மனோ வாக்குக் காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் விரத்தையுடையவனாக இருக்கின்றானாம். வினா: ஏன்? விடை: அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக்கவும், விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும். வினா: கடவுளுக்கு என்ன என்ன பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன? விடை: ஒவ்வொரு தேசத்தாரும் கடவுளை ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள். கிரேக்கர்கள் ஜீயூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், இந்துக்கள் பிரம்மன் என்றும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஜிஹோவா என்றும், முகம்மதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள். வினா: கடவுளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு பெயர்கள் எவை? விடை: பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன. வினா: ஆனால், ஜனங்கள் சொல்லும் கடவுள் ஒரே பொருளைத் தானா குறிக்கிறது? விடை: இல்லை. சிலர் கடவுளை ஒரு ஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் சட்டம் என்கிறார்கள். மற்றும், அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார், கடவுள் பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர், ஜடப் பொருளும் மனமும் அய்க்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள். வினா: மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறார்களா? விடை: மக்களில் பெரும்பாலோர் ஒரு கடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள். வினா: ஒன்று மேற்பட்ட கடவுளுண்டா? விடை: பல கடவுள்கள் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது. வினா: பல கடவுள்களை நம்புகிறவர்களுக்கு என்ன பெயர் அளிக்கப்படுகிறது? விடை: பல கடவுள்களை நம்புவோர் பல தெய்வவாதிகள்; ஒரே கடவுளை நம்புவோர் ஏக தெய்வவாதிகள். வினா: சில, பல தெய்வவாதிகளின் பெயர் சொல்லு. விடை: எகிப்தியர், இந்துக்கள், கிரேக்கர், ரோமர். வினா: ஏக தெய்வவாதிகள் யார்? விடை: யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர். வினா: இவர்கள் எல்லாம் எப்பொழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந்தார்களா? விடை: இல்லை. ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள். வினா: பல தெய்வவாதிகளின் கடவுள்கள் எவை? விடை: சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மலைகள், மரங்கள், பாறைகள், நதிகள் முதலியன. வினா: இவை எல்லாம் கடவுளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்? விடை: எப்படியெனில், ஜனங்கள் அவற்றை வணங்குகிறார்கள்; அவற்றிற்கு ஆலயங்கள் கட்டினார்கள்; விக்கிரங்கள் உண்டு பண்ணினார்கள்; அவற்றிற்கு பூஜைகள் நடத்தினார்கள். வினா: இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன என்று ஜனங்கள் நம்பினார்களா? விடை: எல்லா கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள் அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப்பேர் நம்பினார்கள். வினா: அறிவில்லாதவர்களோ? விடை: அவற்றில் சில அதிக சக்தியுடையவை என்றும், சில கருணையுடையவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியடையவை என்றும் நம்பினார்கள். வினா: கடவுள் உற்பத்திக்கு அவர்கள் என்ன காரணம் கூறுகிறார்கள்? விடை: கடவுள் உற்பத்திக்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. வினா: அவற்றுள் சிலவற்றை விளக்கு. விடை: முதற்காரணம்: ஆதிகால மக்கள் அறிவில்லாதவர்களாயும், குழந்தைகளைப்போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே, தனக்கு அறிய முடியாதவைமீது அவர்களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காண முடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள். இரண்டாவது: மக்கள் பலவீனராயும், உதவியற்றவராயும் இருப்பதனால், அவர்களுக்கு உதவியளிக்கக் கூடிய சர்வ சக்தியுடைய ஒன்று இருக்கவேண்டுமென்று நம்பினார்கள். மூன்றாவது: மனிதன் இயல்பாக நேசமனப்பான்மையுடையவன். பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே, தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் விரும்புகிறான். இறுதியில், அறிய முடியாத சக்திகளை கடவுளாக உருவகப்படுத்திக் கொள்கிறான். நான்காவது: தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம். வினா: அது எப்படி? விடை: நமக்கு உலகத்தில் சிரஞ்சீவியாக வாழ முடியுமானால், தெய்வங்களைப் பற்றியோ, தெய்வீக சக்திகளைப் பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென்மத்தைப் பற்றியும், பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப் பற்றியும் யோசிக்க வேண்டியதாக ஏற்படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாததனால் கடவுளும் இல்லை. வினா: தெய்வங்களின் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறதா? விடை: இல்லை. அது குறைந்துக்கொண்டே போகிறது. வினா: ஏன்? விடை: மக்களது அறிவும், சக்தியும் வளர வளர, தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது. வினா: அறிவில்லாதவர் கடவுளைவிட அறிவுடையோர் கடவுள் குறைவா? விடை: ஆம். நாகரிகமில்லாதவர்களே பல தெய்வங்களை வணங்குகிறார்கள். வினா: ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன? விடை: இப்பொழுதும் பெரும்பாலார் ஏக தெய்வ நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறார்கள். வினா: கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும் இருக்கிறார்களா? விடை: ஆம். அதிகம் பேர் இருக்கிறார்கள். வினா: அவர்கள் ஏன் கடவுளை நம்பவில்லை? விடை: பொது ஜனங்கள் சங்கற்பப்படியுள்ள கடவுள் நமது அறிவுக்கு அதீதமானதென்று அவர்கள் கூறுகிறார்கள். வினா: கடவுள் உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாதா? விடை: சிலர் முடியும் என்கிறார்கள்; சிலர் முடியாது என்கிறார்கள். வினா: கடவுள் உண்மைக்கு கூறப்படும் ஆதாரங்கள் எவை? விடை: முதல் ஆதாரம் காரண காரிய வாதம். வினா: அதை விளக்கிக் கூறு. விடை: எதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். எனவே, பிரபஞ்சத்துக்கும் ஒரு கர்த்தா இருக்கவேண்டும். அந்த கர்த்தாவே கடவுள். வினா: இது ஒரு பலமான வாதமல்லவா? விடை: பலமான வாதந்தான்; ஆனால், முடிவானதல்ல. வினா: ஏன்? விடை: யாவற்றிற்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமானால், கடவுளுக்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமே. வினா: கடவுள் அனாதியாக இருக்கக் கூடாதா? விடை: காரணமில்லாமலே கடவுளுக்கு இயங்க முடியுமானால், காரணமில்லாமல் காரியமில்லை என்ற வாதமே அடியற்று வீழ்ந்து விடுகிறது. வினா: அப்புறம்? விடை: காரணமின்றி அனாதிகாலமாக கடவுள் இயங்க முடியுமானால், பிரபஞ்சமும் எக்காரணமுமின்றி அனாதிகாலமாக இயங்க முடியும். வினா: கடவுளுக்கும் ஒரு காரணமுண்டு என சம்மதித்தால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? விடை: அப்படியானால், அந்தக் காரணத்துக்கு மூல காரணம் என்ன என்று ஆராய வேண்டியதாக ஏற்படும். அவ்வாறு ஆராயத் தொடங்கினால் முடிவே ஏற்படாது. வினா: வேறு வாதம் என்ன? விடை: பூரணத்துவ வாதம். வினா: அது என்ன? விளக்கிக் கூறு. விடை: அதாவது, நாம் அபூரணராக இருந்தாலும் (குறைபாடுடையவர்களாக இருந்தாலும்) பூரணமான ஒரு பொருள் உண்டென்ற உணர்ச்சி நமக்கு இருந்து கொண்டு இருக்கிறது. அந்த உணர்ச்சி அந்த பூரணப் பொருளின் சாயல் என்று நம்பப்படுகிறது. வினா: அதனால் நாம் ஊகிக்க வேண்டியதென்ன? விடை: அந்த உணர்ச்சி நமது உள்ளத்துள் இருந்துகொண்டு இருப்பதனால், அதற்கு ஆதாரமாக ஒன்று இருக்கவேண்டும் என்றும், அதுவே கடவுள் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது. வினா: மேலும் கொஞ்சம் விளக்குக. விடை: ஒரு பூரண வஸ்துவின் பிரதிபிம்பம் நமது உள்ளத்துத் தோன்ற வேண்டுமானால் அது உள் பொருளாக இருக்க வேண்டும். அது உள் பொருளாக இல்லையானால், பூரணமாக இருக்க முடியாது. வினா: அப்படியானால் முடிவு என்ன? விடை: கடவுளைப் பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதனால், கடவுள் ஒன்று இருக்கவேண்டும்; அப்படி ஒன்று இல்லையானால் நமக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டிருக்கவே செய்யாது என்பதுதான் முடிவு. வினா: இந்த வாதம் சரியானது தானா? விடை: முதல் வாதத்தைப் போல இது அவ்வளவு உறுதியானதல்ல. வினா: ஏன்? விடை: பூரணத்துவம் ஒரு குணம். உண்மை ஒரு நிலைமை. அவை இரண்டும் சம்பந்தமற்றவை. ஒரு பெரிய பட்டணம் கடலில் ஆழ்ந்து கிடப்பதாகவோ, மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவோ நமது உள்ளத்து ஒரு உணர்ச்சி ஏற்படலாம். ஆனால், அப்பேர்ப்பட்ட ஒரு பட்டணம் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதுபோல, ஒரு பூரண வஸ்துவைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதனால், ஒரு பூரண வஸ்து இருக்கவேண்டுமென்ற கட்டாயமும் இல்லை. வினா: வேறொரு உதாரணத்தினால் விளக்கிக் காட்டு. விடை: பூமி பரந்திருப்பதாக வெகுகுலம் மக்கள் நம்பி வந்தார்கள். அந்த உணர்ச்சி உலகத்தின் பிரதி பிம்பமாக இருக்க முடியாது. ஏனெனில், பரபரப்பான பூமி இல்லவே இல்லை. வினா: அப்படியானால், பூரண வஸ்துகளும், அபூரண வஸ்துகளும் நமது மனோ கற்பிதம்தானா? விடை: ஆம் வினா: அடுத்த வாதம் என்ன? விடை: அடுத்தது உருவக வாதம். வினா: அதை விளக்கு. விடை: வினாடி, நிமிஷம், மணி காட்டும் முறையில் ஒரு கடிகாரம் உருப்படுத்தப்பட்டிருப்பதனால் அது ஒரு நோக்கத்துடன் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றதென்றும், அதற்கு ஒரு கர்த்தா இருக்கவேண்டுமென்றும் நாம் அறிகிறோம். அதுபோல, உலகமும் ஒரு நோக்கத்தோடு சிருஷ்டிக்கப்பட்டிருப்பதனால் அதற்கு ஒரு கர்த்தா இருக்கவேண்டும் அந்த கர்த்தாவே கடவுள். வினா: இந்த வாதம் எப்பேர்ப்பட்டது? விடை: கடிகாரத்தை உலகத்துக்கு உவமையாகக் கூற முடியாது. கடிகாரம் எதற்காக உண்டு பண்ணப்பட்டதென்று கூறிவிடலாம். ஆனால், உலகம் எதற்காக உண்டு பண்ணப்பட்டதென்று கூறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வினா: பிரபஞ்ச அமைப்பு, கடிகார அமைப்புப்போல அவ்வளவு தெளிவானதல்லவா? விடை: தெளிவாக இருந்தால் இரகசியங்களுக்கு இடமே இல்லை. வினா: கடிகாரத்தைப் பற்றி நாம் பூரணமாக அறிந்திருப்பதுபோல, பிரபஞ்சத்தைப்பற்றி நாம் பூரணமாக அறியவில்லையென்று நீ கூறுகிறாயா? விடை: ஆம். கடிகாரத்தின் அமைப்பை நமக்குத் தெளிவாக விளக்கிக் கூற முடியும். பிரபஞ்ச அமைப்பை தெளிவாக விளக்கிக் கூற முடியாது. வினா: இந்த வாதத்தைப் பற்றி வேறு ஏதாவது சொல்ல வேண்டியதுண்டா? விடை: கடிகாரத்தைப் பார்த்தவுடன், அதை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கவேண்டுமென்று அறியலாமேயன்றி, கடிகார உற்பத்திக் காரணமான பொருள்களை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டுமென்றும் சொல்ல முடியாது. வினா: வேறு என்ன? விடை: உலகத்தை உண்டு பண்ணியவன் ஒருவன் உண்டென்று ஒப்புக்கொண்டாலும், உலகத்தைச் சிருஷ்டித்தவன் ஒருவன் இருப்பதாக நமக்கு ருசுப்படுத்த முடியாது. வினா: இம்மாதிரியான சங்கடங்கள் பல இருப்பதனால் பிரஸ்தாப விஷயத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன? விடை: நாம் அந்தரங்க சுத்தியோடு ஆராய வேண்டும். பிடிவாதமாக எதையும் நம்பக்கூடாது. திறந்த மனத்தோடு உண்மையை அறிய முயலவேண்டும்! வினா: கடவுள் என்ற பெயரை நாம் எந்தப் பொருளில் வழங்கவேண்டும்? விடை: ஜீவகோடிகளின் உயர்ந்த லட்சியத்தைக் குறிக்கும் பொருளாகவே நாம் வழங்கவேண்டும். வினா: அப்படியானால், சிலரின் தெய்வங்கள் உத்தமமானவை என்றும், சிலரின் தெய்வங்கள் மோசமானவை என்றும் ஏற்படாதா? விடை: ஆம். நிச்சயமாக ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் லட்சியத்துக்கும், கடவுளுக்கும் அளவுகோலாக இருக்கிறான். வினா: மேலும் கொஞ்சம் விளக்கு. விடை: நமது கண் பார்வை எட்டும் அளவுக்கே நமக்குப் பார்க்க முடியும். அதுபோல, நமது மனோ சக்திக்கு இயன்ற அளவிலேயே நமக்குச் சிந்திக்கவும், விரும்பவும் முடியும். வினா: அப்படியானால் கடவுளைச் சிருஷ்டித்தது யார்? விடை: ஒவ்வொருவனும் தன் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான்.